சரும வறட்சி என்பது குளிர்காலத்தில் மட்டும் தான் வரும் என்பதில்லை, கோடைக்காலத்திலும் வரும். எப்படியெனில் சூரியக்கதிர்கள் சருமத்தை நேரடியாக தாக்கி, சருமத்தில் உள்ள நீர்ச்சத்தை முற்றிலும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு, சருமம் அதிகம் வறட்சியடையும். குறிப்பாக சிலருக்கு கோடையில் உதடு வெடிப்புகள் ஏற்படும்.


சூரியக்கதிர்கள் சருமத்தில் அதிகம் படுவதால், சரும செல்கள் அதிகம் பாதிப்படைந்துவிடுகிறது. ஆகவே அதனை புத்துணர்ச்சியூட்டவும், சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கவும் அவ்வப்போது கோடையில் சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளும் பராமரிப்புக்களில் வாழைப்பழத்தை சேர்த்துக் கொண்டால், அதில் உள்ள சத்துக்கள் சரும செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

 மேலும் வாழைப்பழம் விலை குறைவான ஒன்று என்பதால், அதனைக் கொண்டு விடுமுறை நாட்களில் அல்லது நேரம் கிடைக்கும் போது ஃபேஸ் பேக் போட்டு வந்தால், கோடையிலும் அழகாக காட்சியளிக்கலாம். சரி, இப்போது அந்த வாழைப்பழ மாஸ்க்குகளை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

வாழைப்பழம் மற்றும் ஆலிவ் ஆயில்

வாழைப்பழத்தை மசித்து, அதில் சிறிது தேன் மற்றம் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால், சரும சுருக்கங்கள் மறைந்து, முகம் பொலிவோடு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

வாழைப்பழம் மற்றும் வெண்ணெய்

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முகம் மென்மையாகவும், பொலிவோடும், வறட்சியின்றி இருக்கும்.

வாழைப்பழம் மற்றும் வைட்டமின் ஈ பேக்

மசித்த வாழைப்பழத்தில் வைட்டமின் ஈ மாத்திரை பொடி/எண்ணெய் மற்றும் தேன் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமம் இளமையோடும், வறட்சியின்றியும் இருக்கும்.

வாழைப்பழம் மற்றும் தயிர் பேக்

வாழைப்பழத்தை மசித்து, அதில் தயிர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள கருமை, வறட்சி போன்றவை நீங்கி, முகம் புத்துணர்ச்சியோடு காணப்படும்.

வாழைப்பழம் மற்றும் எலுமிச்சை சாறு

கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி முகத்திற்கு மாஸ்க் போட்டு, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், பாதிப்படைந்த சரும செல்கள் புதுப்பிக்கப்படும்.
Powered by Blogger.