உணவின் சுவையை அதிகரிக்க உதவும் உப்பு, அழகு பராமரிப்பிலும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதுவும் பலரது முகத்தில் அழகை கெடுக்கும் வண்ணம் இருக்கும் சொசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க உப்பு பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் பலருக்கும் உப்பைக் கொண்டு எப்படி கரும்புள்ளிகளை நீக்குவது என்பது தெரியாது.

இந்த உப்பு கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்யும் போது, கரும்புள்ளிகள் மட்டுமின்றி, இறந்த செல்களும் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும். சரி, இப்போது உப்பைக் கொண்டு எப்படியெல்லாம் கரும்புள்ளிகளைப் போக்கலாம் என்று பார்ப்போம்.



உப்பு மற்றும் ரோஸ் வாட்டர் 

1 டேபிள் ஸ்பூன் உப்பை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்பு கலந்து வைத்துள்ள கலவைக் கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

உப்பு மற்றும் சர்க்கரை 

1 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை ஒரு பௌலில் போட்டு கலந்து, ஈரமான முகத்தில் அவற்றைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து, ஈரமான காட்டன் கொண்டு துடைத்து எடுத்து, பின் முகத்திற்கு மாஸ்சுரைசர் தடவவும். இப்படி செய்வதால், கரும்புள்ளிகளின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

உப்பு மற்றும் தேன் 

தேன் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் தேனில், 2 டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனைக் காணலாம்.

உப்பு மற்றும் கடலை மாவு 

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் தேய்த்து கழுவ, கரும்புள்ளிகள் நீங்கும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

உப்பு மற்றும் எலுமிச்சை சாறு 

இந்த முறைக்கு முதலில் எலுமிச்சை சாற்றில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதனை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி பின் உப்பு கொண்டு மென்மையாக மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதே முறையை 8 நாட்கள் கழித்து மீண்டும் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால், கரும்புள்ளிகள் வருவதைத் தடுக்கலாம்.

உப்பு மற்றும் டூத் பேஸ்ட் 

கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பேஸ்ட்டை தடவி, பின் உப்பு கொண்டு அவ்விடத்தை மேலிருந்து கீழாக தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் கரும்புள்ளிகள் மட்டுமின்றி, உலர்ந்த சருமமும் நீங்கும்.

உப்பு மற்றும் தயிர் 

முதலில் உப்பை நீரில் கலந்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் கழித்து, குளிர்ச்சியான தயிரை தடவி 10 நிமிடம் உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமம் வறட்சியடையாமல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
Powered by Blogger.