உங்களுக்கு அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற அழகு நன்மைகள் உள்ளது என்று தெரியுமா? இந்தியாவில் பாரம்பரிய உணவு தான் அரிசி. அந்த அரிசி கழுவிய நீரானது, இந்தியாவின் பல பகுதிகளில் அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் சருமம், கூந்தல் போன்றவற்றைப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், அதனால் பல பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. மேலும் ஆய்வுகளிலும் அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. சரி, இப்போது அரிசி கழுவிய நீரில் நிறைந்துள்ள அழகு நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

எப்படி தயாரிப்பது? 

முதலில் அரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை சுத்தமான நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, அந்த நீரை வடிகட்டி சேகரித்து, அந்நீரால் முகம் மற்றும் கூந்தலைப் பராமரிக்கலாம்.

சரும சுருக்கம் 

அரிசி கழுவிய நீரைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும். அதற்கு காட்டனை அரிசி கழுவிய நீரில் நனைத்து, பின் அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.

பொலிவான முகம் 

அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும்.

மென்மையான கூந்தல் 

கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.

ஆற்றல் 

அரிசி கழுவிய நீர் அழகை அதிகரிக்க மட்டுமின்றி, அதனைக் குடித்தால், உடலின் ஆற்றலும் அதிகரிக்கும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட்டுகளும், மற்ற ஊட்டச்சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது.

Powered by Blogger.